முருங்கையும் - மதிப்பு கூட்டலும்
தமிழ்நாடு தவிர, இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் முருங்கைப்
பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் முருங்கைப்பொருள்கள் மருத்துவப் பொருளாக மதிப்புக் கூட்டல் செய்து
பயன்படுத்தப்படுகின்றன.
தென் மாநிலத்தவர்களின் காய்கறிகள் பட்டியலில் தமிழ்நாட்டு முருங்கைக்காய்க்கு என எப்பவுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல், சூப் என முருங்கைக்காயைக் கொண்டு பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்கள் நிறைந்து இருப்பதால், எப்படி தோனி இல்லாம CSK இல்லையோ, அதுமாதிரி முருங்கைக்காய் இல்லாத சைவ உணவே இல்லை.
முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கி வளரும் தாவரம். மேலும், தண்ணீரின் தேவையும் கூட குறைவே. அதனால்தான் காய்கறிப் பயிர் செய்யும் விவசாயிகள், முருங்கையையும் சேர்த்து சாகுபடி செய்வதுண்டு. முருங்கையில் நாட்டுமுருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இப்போது புதிதாக கரும்பு முருங்கை என ஒன்று மூன்றாவது வகையாக புதிதாக வந்துள்ளது (இதைப்பற்றி அடுத்த பதிவில் தனித்தனியாக பார்ப்போம்).
இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள்.நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
செடிமுருங்கையில் காய்கள் பெரியதாக இருந்தாலும், சுவை குறைவாக தான் இருக்கும். செடிமுருங்கை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. செடிமுருங்கை விதை மூலம் நடவு செய்யப்படுகின்றன.
கரும்பு முருங்கையில் காய்கள் சற்று திடமாக நீளமாக இருக்கும்.கரும்பு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 1 ஆண்டு. கரும்பு முருங்கை ஆரோக்கியமான முதிர்ந்த மரத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து பதியம் மூலம் நடவு செய்யப்படுகின்றன.
தயார்படுத்தல்:
நடவு செய்து முறையாகப் பராமரித்தால், முருங்கையின் வேர் ஒரு மாதத்தில் பூமியில் நன்றாக இறங்கி, பின்பு, வறட்சியைத் தாங்கி வளர்ந்துவிடும். முறையாகக் கவாத்து செய்தால், நல்ல மகசூல் எடுக்கலாம். நடவு செய்த 6 மாதத்திற்கு பின்புதான் காய் காய்ப்புக்கு வரும். ஒன்றரை வருடத்துக்கு மேல்தான் நல்ல மகசூல் கிடைக்கும். வருடத்துக்கு மூணு போகம் காய்கள் காய்க்கும். அதிகப் பராமரிப்பு தேவைப்படாத, செலவு வைக்காத பயிர் முருங்கைதான். முருங்கைக்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது.
முருங்கையின் இலை, பட்டை, காய், விதை என அணைத்து பாகங்களையும் நம்மால் விற்பனை செய்ய முடியும். எல்லாவற்றிலும் மருத்துவக் குணம் இருப்பதால், ஆரோக்கியமான பொலிவான உடலைப்பெற முடியும். எனவே தமிழ்நாட்டு முருங்கைக்கு எப்போதும் எங்கேயும் நல்ல வரவேற்புஉண்டு .
நடவு செய்து ஒன்றரை வருடம் கழித்து, நல்ல பராமரிப்பில் இருக்கும் ஒரு மரத்திலிருந்து வருடத்துக்குச் குறைந்தது 150 கிலோ வரை காய் கிடைக்கும். பொதுவாக ஒரு கிலோ முருங்கை காய் 10 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முகூர்த்த மற்றும் விசேஷ நாள்களில் மேலும் விலை அதிகரிக்கும். குறைந்தபட்ச விலையாகக் கிலோவுக்கு 10 ரூபாய் கிடைத்தாலும் 150 கிலோவுக்கு 1500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருக்கும் 160 மரங்கள் மூலமாக வருடத்திற்கு நல்ல ஒரு வருமானம் கிடைக்கும்.
முருங்கையை அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம் (களர், உவர் மண்களில் மகசூல் கொஞ்சம் குறையும்). நிலத்தை நன்றாக உழவு செய்து,16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்து, வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளியுடன் ஒரே மாதிரியாக இருக்கும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு, பின்பு நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு செய்த 3 மற்றும் 5-ம் நாள்களில் மீண்டும் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சிபராமரிக்க வேண்டும். 20-ம் நாளில் ஒவ்வொரு செடியின் தூரிலும் கடலைப் புண்ணாக்கு வைத்து, மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40 முதல் 70-ம் நாள்களில் உண்டாகும் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்வதன் மூலம் பக்கவாட்டுக் கிளைகளை அதிகமாக வளர்க்க முடியும்.
நடவு செய்த 120-ம் நாளுக்குள் முருங்கை செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப மீண்டும் ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாள்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, கடலைப் பிண்ணாக்கும், அறுவடை முடிந்தவுடன், தொழுவுரமும் ஒவ்வொரு மரத்திற்கும் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால் தரமான விளைச்சலை பெற முடியும். இதைத்தவிர வேறு பராமரிப்பு தேவையில்லை.
நாற்று தயாரிப்பு:
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ஓரளவுக்கு (40%) ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும்.
முருங்கை மரம் பூவெடுக்கும் நேரத்தில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்கி, அந்த இடத்தில் ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாகக் கட்டி வைத்து விட வேண்டும்.
பின்பு, 40 நாள்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புதிதாக சில வேர்கள் உருவாகி இருக்கும். அந்த வேர் உண்டான இடத்தில் குச்சியை வெட்டி எடுத்து, மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாள்கள் கழித்து, நன்கு வளர்ந்த பின்பு நிலத்தில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு தயாரிக்கும் நாற்றுகளை விற்பதன் மூலம் ஓரளவு வருமானம் பெற முடியும்.
முருங்கையில் லாபம் :
முருங்கை மரங்களிலிருந்து வருடத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாற்றுகள் வரை உருவாக்க முடியும். அதில் 70% நாற்றுகள்மட்டுமே பயன்படுத்த முடியும்.
முருங்கை காயை அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரிலிருந்து ஒரு ஆண்டுக்கு, சுமாராக 200 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.
இயற்கையில் விளையும் முருங்கை இலைக்கும், காய்க்கும் எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அப்படி இருக்கையில், இலையை பறித்தால் காயின் மகசூலும் குறையும். இலைக்காகச் சாகுபடி செய்தால், அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், 40 நாள்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியும்.
பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல்:
முருங்கை இலைகளில் துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்த அறிகுறி தெரிந்தால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளிப்பதன் மூலம் கம்பளிப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். எந்த நோயும் தாக்காமல் இருக்க, பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும். மேலு, இயற்கையான முறையில் பராமரிப்பு செய்தால் பெரும்பாலும் பூச்சிகள் வருவதில்லை, நோய்களும் தாக்குவதில்லை.
முருங்கை மதிப்புக் கூட்டல் பொருள்கள்:
தமிழ் நாட்டில், பொதுவாக கீரை, காய், சூப் என முருங்கை உணவாகவே உண்ணப்படுகிறது. ஆனால் இப்போது முருங்கை மதிப்புக் கூட்டல் பொருள்களாக மாறி பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டு முருங்கைக்கு நம்நாட்டை விட வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது. முருங்கையைப் பொடியாக்கி விற்பனை செய்வது முதல், முருங்கைக் காயில் இருக்கும் விதைகள் வரை தனித்தனியாக விற்பனை செய்யும் அளவுக்கு முருங்கையின் சந்தை சர்வதேச அளவில் பெரிதாக உள்ளது.
முருங்கையை மதிப்புக் கூட்டலின் மூலம் முருங்கையின் பட்டை, இலை, விதை என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். முருங்கைப் பொடி, முருங்கை டீ, முருங்கை விதை எண்ணெய், முருங்கைப் புண்ணாக்கு, முருங்கை ஷாம்பூ, முருங்கைச் சோப்பு, முருங்கை முகப் பொலிவு பேஸ்ட் என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.